Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

திருவொற்றியூரில் வீட்டுமனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை

பட்ட வழங்காததைக் கண்டித்து திருவொற்றியூரில் வழக்குரைஞர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி  நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் வழக்குரைஞர் ஜி.சுப்பிரமணி தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து வழக்குரைஞர் ஜி.சுப்பிரமணி கூறியது:
ஆன்லைன் மூலம் தாமதமின்றி பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும், வருவாய்த்துறை அமைச்சரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.

திருவொற்றியூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்குவதற்காக எந்தவித காலக்கெடுவோ அல்லது முறையான நடைமுறைகளோ பின்பற்றப்படுவதில்லை. எப்போது வந்தாலும் வட்டாட்சியர்  எப்போது அலுவலகத்திற்கு வருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பொதுமக்கள் நாள்தோறும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இடைத்தரகர்கள் மூலம் தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது.   திருவொற்றியூர் நகரம் நகராட்சியாக இருந்தபோது வழங்கிய பட்டா இருந்தாலும் நத்தம் புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் மக்களும் கணிணி கம்ப்யூட்டர் பட்டா இல்லை என வட்டாட்சியர் கூறுகிறார்.

ஆனால் இடைத்தரகர்கள் மூலம் கணிணி பட்டா வழங்கப் படுகிறது.  இது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  எனவே ஏழை எளிய மக்களின் குறைகளைப் போக்கும் வகையில் உரிய விசாரணை நடத்தி உடனடியாக தகுதி உடையவர் களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் சுப்பிரமணி.

இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதி ராமலிங்கம்,  வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top