Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி குடியேறும் போராட்டம்

புதுக்கோட்டை

பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்குபட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அக்.18 -ல் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாப்பட்டியில் புல எண் 251/13-ல் உள்ள சுமார் ஒரு ஏக்கர் நத்தம் புறம்போக்கில் தலித் மக்கள் பல தலைமுறைகளாக குடியிருந்து வந்தனர். இவர்கள் குடியிருந்து வந்த பகுதி தாழ்வாக இருந்ததால் அவ்வப்போது பெய்த பெருமழையின் காரணமாக 1962, 1972, 1990 ஆண்டுகளில் இங்கிருந்து படிப்படியாக வெளியேறி அருகில் உள்ள டி.தோப்புக்கொல்லை கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குடிபெயர்ந்தனர்.

இவர்கள் குடிபெயர்ந்தாலும் இவர்களுக்கான குலதெய்வம், சுடுகாடு போன்றவை இங்குதான் உள்ளது. காலப்போக்கில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்பொழுது குடியிருந்து வரும் இடம் போதாமல் நெருக்கடி யில் தவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தாங்கள் காலம் காலமாக குடியிருந்துவந்த பாப்பாபட்டியிலேயே அவர்கள் குடியேறிவிட முடிவுசெய்து மேற்படி இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கொடுத்து வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து பட்டா வழங்க மறுத்து வந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி தலைமை வகித்தார். டி.ரவிக்குமார், எம்.ரெங்கசாமி, கே.ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தொடங்கிவைத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு உரையாற்றினார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தீ.ஒ.மு. மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், கட்டுமாத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி மற்றும் கிராமப் பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குடியேறும் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு சில குடிசைகளைப் போட்டு பால் காய்ச்சினர். போராட்டம் தொடர்ந்த நிலையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் செந்தில்நாயகி, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலித் மக்கள் ஏற்கெனவே பல தலைமுறைகளாக இங்கு குடியிருந்து வந்தவர்கள் என்பதாலும், அந்த இடத்திலேயே தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருப்பதாலும் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பது என எழுத்துப்பூர்வ மாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top