Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைகளை போக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்

ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநல பொதுச்செயலர் சந்திரகுமார்

நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைபாடுகளை போக்க தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட வேண்டுமென ஏஐடியுசி  வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் கீழராஜவீதி சங்க அலுவலக கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு ,துணைத்தலைவர் கே.ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், மாநில பொருளாளர் தி. கோவிந்தராஜன், இணைப் பொதுச் செயலாளர் ஜெ. குணசேகரன், செயலாளர்கள் எம் .எஸ் . கிருஷ்ணன், எம். கலியபெருமாள். கே எஸ் முருகேசன்.

 திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கணேசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ் சிவா, நாகை மாவட்ட செயலாளர்  ஆனந்தன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி.சிவகுருநாதன், டி. சம்பத் , தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கே.ராஜேந்திரன் , எஸ்.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது  நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு பேசினார்.

தமிழ்நாடு நுகர் பொருள் வணிக கழகத்தில் தற்போதுள்ள நிலையில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவாகும். நிர்வாகத்தை முறையாக செயல்படுத்தினால் நஷ்டம் ஏற்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த முறையில் குறிப்பாக பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு டெண்டர் விடுவது போன்றவற்றில் அரசுக்கு பல லட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுகிறது.

டெண்டர் முறையில் உள்ள உள் வேலைகள் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதோடு, இடைத்தரர்கள் பெரும் லாபம் அடையச் செய்கிறது. மேலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்கின்ற நெல் , அரைத்து அரிசியாக்குகின்ற போது கிடைக்கின்ற தவிடு, குருணை போன்ற உபபொருட்கள் டெண்டர் என்ற பெயரால், இடைத்தரகர்களால் பெருமளவிற்கு அபகரிக்கப்படுகிறது.

எனவே டெண்டர் முறையில் செயற்கையான பற்றாக் குறையை காண்பித்து இடைத்தரகர்கள் லாபமடைவதும்,. நெல் அரவையின் போது உப பொருட்கள் மூலம் கிடைக்கின்ற உண்மையான விலை அரசுக்கு முழுமையாக கிடைக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

தனியார் உதவியுடன் நெல் அரவை என்ற புதிய முறை மூலம் பெருமளவு லாபம் தனியாரை சென்றடையும் நிலை உள்ளது. எனவே அரசு நேரடி பொறுப்பில், நேரடி கண்காணிப்பில் நெல் அரைவை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய அரவை முறையை கைவிட வேண்டுகிறோம்.

ஏற்கெனவே நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்தில் கூலி பெற்று பணியாற்றிவரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாற்றாக டெண்டர் விட்டு இடைத்தரகர்களை ஈடுபடுத்துவது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப்பெரிய அநீதியாகும்.

இது திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும், உடனடியாக இந்த முறையை கைவிட வேண்டுகிறோம். ஓய்வு பெற்ற பணியாளர்கள் வயது முதிர்வு காலத்தில் மருத்துவ உதவி, அன்றாட தேவைகள் என மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், நிர்வாகம் பரிந்துரை செய்து ள்ள ரூபாய் 4000 மாத கருணை ஊதியம் வழங்குவதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து உடன் நிறைவேற்ற வேண்டு கிறோம்.

ஆயிரக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையங்கள் தேக்கம் ஏற்பட்டு பின்பு இயக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படுகின்ற இழப்பை கொள்முதல் பணியாளர் களிடம் கட்டாயப்படுத்தி, கோடிக்கணக்கில் தொகை வசூலிப்பதை கைவிட வேண்டுகிறோம்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயிக்கப்பட்டது கடந்த ஜூலை யுடன் முடிவடைந்து விட்டது, புதிய கூலி நிர்ணயமானது, இந்திய உணவு கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பெறுகின்ற கூலிக்கு‌ இணையாக நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் களுக்கும் கூலி நிர்ணயித்து வழங்க வேண்டுமென மாநில நிர்வாக குழு கூட்டத்தில்  அரசையும், நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதெனவும் த முடிவு செய்யப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top