Close
மார்ச் 7, 2026 5:46 மணி

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவக்க கோரிக்கை..!

நாமக்கல் மாவட்டம், முசிறி பஞ்சாயத்தில் லாரி பாடி பில்டிங் கிளஸ்டர் தொழிற்பேட்டை அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் டேங்க் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ;

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியை அடுத்த முசிறி கிராமத்தில், நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் பாடி கட்டுமான தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிளஸ்டர்) தொடங்குவதற்காக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

பின்னர், அங்கு லாரி பில்டிங் தொழில்பேட்டை அமைப்பதற்கான, அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக, குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, தார் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன்மூலம் தமிழக அரசின் சார்பில் பலகோடி ரூபாயம் செலவிடப்பட்டது. அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதுவரை அங்கு எந்தவிதமான தொழில் நிறுவனங்களும் வரவில்லை.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தமிழக தொழில்துறை அமைச்சரை சந்தித்து நாமக்கல்லில் லாரி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

முசிறி பஞ்சாயத்தில் உள்ள இடம் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளதால், அந்த இடத்தில் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு லாரி தொழில் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். மேலும், இது போன்ற பல இடங்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே தொழிற்பேட்டை என அறிவிக்கப்பட்டு, எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் காலி நிலமாக கிடக்கின்றன.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தொழிற்பேட்டை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதாக கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top