Close
செப்டம்பர் 20, 2024 2:31 காலை

சோழவந்தான் குருவித்துறை ஆதி மாசானியம்மன் கோயில் தை திருவிழா

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் குருவித்துறை ஆதி மாசானியம்மன் கோயிலில் நடைபெற்ற சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்

சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசானி அம்மன் கோயில்  தைத்திருவிழாவில் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வழிபாடு நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசானியம்மன் கோயில் உள்ளது. வருடந்தோறும் தை மாதத்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

நேற்று இரவு மயான பூஜை உடன் தொடங்கி இன்று காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகத்தினை பூசாரி சின்னமாயன் சுமந்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

தொடர்ந்து கோயிலில் மாசானி அம்மனுக்கு படையல் இட்டு பூஜைகள் செய்யப்பட்டது ‌. நாளை திங்கட்கிழமை கோயில் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவமும். செவ்வாய்க்கிழமை  சக்தி கரகம் கரைத்தல் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறுகிறது.  இரவு 7 மணிக்கு மேல் கருப்புசாமி, முனியாண்டி சுவாமிகளுக்கு மறு பூஜை நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதி மாசானி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

சிறுதெய்வ வழிபாடுகள் எந்தவித கோட்பாடுகளுக்கும் உள்ளடங்காமல் கிராம மக்கள் விரும்பிய வண்ணம் நிகழ்த்தப்படுகின்றன.

சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தெய்வங்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். ஒவ்வொரு தெய்வமும் தனக்கெனத் தனித்த வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும். சிறுதெய்வ வழிபாடுகள் என்பது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களில் நடைமுறையில் உள்ள வழிபாடுகளே.சிறுதெய்வ வழிபாடுகளில் தெய்வங்களை அலங்கரித்தல், பூஜை செய்தல், படையல் போடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், ஆடியும் பாடியும் துதித்தல் போன்றவை வழிபாட்டு முறைகளாக அமைகின்றன.

ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியே ஓர் தெய்வங்கள் இருக்கும். உதாரணமாக ஊர்பொதுவில் இருக்கும் மாரியம்மன், கருப்பர், ஐய்யனார், முனியப்பன் போன்ற தெய்வங்கள் இருக்கும். இந்த ஊர் தெய்வங்களுக்குக் கிராம மக்கள் எடுக்கும் திருவிழா பெரிய கும்பிடு என அழைக்கப்படுகிறது.

பெரியகும்பிடை அடிப்படையாகக் கொண்டே சடங்குகளும், நேர்த்திக் கடன்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமங்களில் பஞ்சம், வறட்சி, நோய்த் தொற்று போன்றவை ஏற்பட்டால் பெரிய கும்பிடு நடத்தப்படுகிறது. இது பெரிய கும்பிடு, சாமி கும்பிடு, ஊர்த் திருவிழா, கொடை விழா, பெரிய நோம்பி என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும்.

பெரிய கும்பிடு வழிபாட்டு முறைகள்:சாமி உத்தரவு கேட்டல்,காப்புக்கட்டுதல்,கம்பம் நடுதல்,முளைப்பாரி போடுதல், வேப்பிலை தோரணம் கட்டுதல், கிடாய் வெட்டுதல்,பொங்கல் வைத்தல்,நேர்த்திக்கடன் செலுத்துதல்,மஞ்சள் நீராடுதல் கலை நிகழ்ச்சிகள் என திருவிழாவில் பலநிலைகள் உள்ளன.

சக்தி கரகமெடுத்தல் : பொதுவாக சிறுதெய்வங்களுக்கு சிலைகளோ, வடிவங்களோ இருக்காது. எனவே கரகத்தில் சாமியை எழச்செய்து கோயிலில் கொண்டுவந்து வைக்கும் சடங்கே ‘சக்திக் கரகம் எடுத்தல்” எனப்படும். இதன் பின்னரே வழிபாடுகளும், சடங்குகளும் நடைபெறும். பூஜைகள் நிகழ்த்துவதன் மூலம் அக்கரகத்தில் தெய்வம் எழுந்தருளும். அதுவே தெய்வமாகவும் வணங்கப்படும். மக்கள் அளிக்கும் படையலையும், சடங்குகளையும் அத்தெய்வம் ஏற்றுக் கொள்ளும்.

பலியிடுதல்:சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடலும், மாமிசப் படையலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பலியிடல் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஒரு சடங்கு முறையாகும். ஓர் உயிரைக் கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிர் காப்பாற்றப்படுகிறது. பாதுகாக்கப்படுகிறது. வளம் பெறுகிறது என்ற நம்பிக்கையே பலியிடலுக்கு அடிப்படையாக அமைகிறது.

நேர்த்திக்கடன்: எது நடந்தாலும் அது தெய்வங்களின் மூலமே நடைபெறுகிறது என்று மக்கள் நம்புகின்றனர். இதனால் பலவிதமான வேண்டுதலை இறைவன் முன் வைக்கின்றனர். அவ்வேண்டுதல் நிறைவேறினால் அதற்குப் பிரதிபலனாக நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top