Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

மாசிப்பெருந்திருவிழா…திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

புதுக்கோட்டை

திருவப்பூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.26 ) நடைபெறும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா, நகர்மன்றத்தலைவர் திலகவதி-செந்தில், அரசு முன்னாள் வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன் உள்பட திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

தலச்சிறப்பு: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதைந்து கிடந்த முத்துமாரி அன்னை பூசாரி ஒருவரின் அருள் வாக்கினால் வெளிப்பட்டாள் என்பதே இந்த அம்மனின் சிறப்பாகும். நகரின் நாற்புறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத் திகழும் அம்பிகைகளின் திருக்கோயில்கள் அமைந்த பெருமை புதுக்கோட்டை நகருக்கே உரிய பெருஞ்சிறப்பு.

அவற்றில் புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் எழுந்தருளி யுள்ள இத்திருத்தலம் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்ற தாகும், நீண்ட நெடுங்காலமாக பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி பக்தர்கள் இதய பீடத்தில் நீங்காது இடம் பெற்று கைமாறு கருதாது கார்மேகம் போல் மாரியாய் அருள் மழை பொழியும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பிற கோயில்களுக்கு சிகரம் வைத்தாற் போல திகழும் இக்கோயிலில் அருள் பொழி்யும் எழில் கோலத்தில் அம்மன் வீற்றிருக்கிறாள்

பிரார்த்தனை:குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட, குடும்பப்பிரச்சினை, வேலைகிடைக்க, தடைப்பட்ட திருமணங்கள் கைகூடிவர வேண்டிக்கொள்ள வருவோர்களும், அம்மை நோய் வந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்தால் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நேர்த்திக்கடன்: அம்மனுக்கு அபிஷேகம், பொங்கல் வைப்பது, மாவிளக்கு, கோழி பலியிடுதல், கரும்புத்தொட்டில், புதுப்புடவை, எலுமிச்சை மாலை சார்த்துதல் போன்ற வழிகளில் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்று கின்றனர்.காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த ஆலயம் திறந்திருக்கும்.

முக்கிய விழாக்கள்: ஆடி வெள்ளி, மாசிப்பெருந்திருவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகும். நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26)  இரவு  நடைபெறவுள்ள பூச்சொரிதல் விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு  தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

தொடர்ந்து வருகிற 5.3.2023 -ல் காப்புக் கட்டு, கொடியேற்றத்துடன் 16 நாள் திருவிழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 13.3.2023 -ல் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.

 21.3.2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை  அம்பாள் திருக்கோ யிலுக்கு வந்து சேர்ந்ததும், திருவிழாவை நிறைவு செய்யும் வகையில் அம்பாளுக்கு  காப்புக்களைந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

அதன் பின்னர், திருக்கோகர்ணம் அக்ரஹார மஹாஜனங்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளி சிம்ம வாகனத்தில்  அம்பாளை எழுந்தருளச் செய்து வீதி உலா சென்று திருக்கோகர்ணம் கோயிலுக்கு வந்து சேரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top