Close
செப்டம்பர் 19, 2024 7:38 மணி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருச்சிராப்பள்ளி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழா

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் பூச்சொரிதல் விழை  12.03.2023 ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
நிகழும் சுபகிருது வருடம் மாசி மாதம் 28-ஆம் தேதி (12.03.2023) ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியும் விசாக நட்சத்திரம் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை  6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனம் லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டதால் இத்திருக்கோயிலி லும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இத்தலத்தில் மகா மாரியம்மன் அருள்பாலித்து தனிப்பெரும் சிறப்பாகும்.

அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிரகண காலங்களில்வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும்.

திருச்சிராப்பள்ளி
சமயபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன்

மேலும் இத்தலத்தில் வழியட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு திருக்கோயிலின் மேற்கூரையில் சிற்பச் சான்றும் உள்ளது. மேஷம், மீனம் வரையிலான பன்னிரு ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறாள் என்பதற்கும், மேற்கூரையில் சிற்பச்சான்றுகள் உள்ளன.

தட்சன் யாகத்திற்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதயில் விழுந்ததால் இத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலந்தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் திருக்கண்கள் உள்ளன. இது இத்திருதலத்தின் புராண பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரமே ஆகும்.

எனவே தான் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாரி சிவபதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருஉருவ மாக விக்ரம சிம்மாசனத்தில், ஆயிரம் கோடி சூரிய பிரகாசத் துடன் தங்கத் திருமுடியுடன், குங்கும நிறமேனியில் நெற்றி யில் வைர பட்டை ஒளி வீச, வைர கம்மல்களும், வைர மூக்குத்தியும் சூரிய சந்திரனைப்போல் ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாலித்து கொண்டிருக்கிறார்.

அன்னைக்கு அன்னையாய் ஆதி முதல் ஆதார சக்தியாய் நாடி
வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும் மாதுளம் மேனியாய், மஞ்சள் உடை உடுத்தி வாசனை மலர்களை திருமேனி முழுவதும் தரித்து காட்சியளிக்கிறாள். மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வததம் செய்த பாவம் நீங்கவும்,

உலக நன்மைக்காகவும், இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது. சகல சௌபாக்கியங்களும் கிடைக்கக மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு,நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி
அம்மனுக்கு பூத்தட்டு ஏந்திச்சென்ற பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்/ தக்கார் சி. கல்யாணி மற்றும் சமயபுரம் பேரூராட்சித் தலைவர் சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுக்களை ஏந்தியும், யானை மீது பூக்கூடைகளை எடுத்து வந்து அம்மனுக்கு சார்த்தி வழிபட்டனர்.  இதைத்தொடர்ந்து பக்தர்களுக்காக பச்சைப்பட்டினி விரதத்தை மாரியம்மன் தொடங்கினார்.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை காலை வரை பக்தர்கள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேல்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top