Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

திருவப்பூர் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

புதுக்கோட்டை

புதுகை திருவப்பூர் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளில் முளைப்பாரி எடுத்துச்சென்ற பெண்கள்

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து, காப்புக் களையும் வைபவத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த மாரியம்மன் ஆலயங்களில் முக்கியம் வாய்ந்த தலமாகத் திகழ்வது திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் ஆகும்.இங்கு ஆண்டு தோறும் மாசிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அது போல நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 26.2.2023 -ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

இதையொட்டி, தலைமைக்கோயிலான திருக்கோகர்கர்ணம் ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆலயத்தில் இருந்து வரும் உற்சவ மாரியம்மனுக்கு தினமும் ஆறுகால பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மேள, தாளத்துடன் திருவப்பூர் கோயிலுக்கு எடுத்துச்சென்று கடந்த 5.3.2023 -ஆம் தேதி இரவு காப்புக்கட்டுதலுடன் கொடியேற்றி மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 16 நாள்களும் கோயிலில் நடைபெற்ற மண்டகப்படி நிகழ்ச்சிகளில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 9 -ஆம் நாள் நடைபெற்ற தோரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி மற்றும் அலகு குத்தி கோயிலுக் குச் சென்று வழிபாடு நடத்தியும், திரளானோர் வடம் பிடித்து தேர் இழுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதையடுத்து, நிறைவு நாளான (21.3.2023)செவ்வாய்க்கிழமை காலையில் திருவப்பூரிலிருந்து திரளான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.இதைத் தொடர்ந்து திருக்கோகர்கர்ணம் பிரஹதம்பாள் கோயிலை வந்தடைந்த உற்சவ மாரியம்ம னுக்கு காப்பு கலைத்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற திருக்கோகர்ணம் அக்ரஹார மண்டகப்படியையொட்டி, அம்மனுக்கு மலர் அலங்காரத் துடன், வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்த பிறகு பிரஹதாம்பாள் ஆலயத்தில் எதாஸ்தானம் செய்யப்பட்டது.

இதில், புதுக்கோட்டை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பா. செந்தில்குமார், திருக்கோயில்கள் செயல் அலுவலர் ச.முத்துராமன், உதவி ஆணையர் தி. அனிதா, கண்காணிப்பாளர் கோ. சண்முகசுந்தரம், ஆய்வர் வி. திவ்யபாரதி, ஆலய மேற்பார்வையாளர் வே. தெட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, அக்ரஹார மண்டகப்படி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top