Close
அக்டோபர் 5, 2024 6:12 மணி

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை

மலர் அலங்காரத்தில் காட்சியளிக்கும் நார்த்தாமலை மாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா  ஞாயிற்றுக்கிழமை இரவில் தொடங்கி  திங்கள்கிழமை விடியும் வரை  நடைபெற்றது.

இதையொட்டி கோயிலுக்கு புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், திருவரங்குளம், மேட்டுப்பட்டி  உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பூக்களை கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன.

இதில் மூலஸ்தானம் கருவறை முழுவதும் பூக்களால் நிரம்பி, அதற்கு அடுத்த அறையும் நிரம்பி, பக்தர்கள் வழிபடும் இடம் அருகே வரை பூக்கள் குவிந்தன.  இந்த நிலையில் அம்மனுக்கு பூக்கள் அனைத்தும் சாற்றப்பட்ட பின்  திங்கள்கிழமை  காலை கோவில் நடை திறக்கப்பட்டது.

இதில் மலை போல் குவிந்து கிடந்த பூக்களுக்கிடையே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனின் திருமுகம் மட்டுமே தெரிந்தது.  அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்து, மனமுருகி வேண்டினர்.

அம்மனுக்கு சாற்றப்பட்ட பூக்களை பக்தர்களுக்கு கோவில் குருக்கள் வினியோகித்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் பங்குனித்திருவிழா வருகிற 2- ஆம்  தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது மாதம் 10-ஆம்  தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட வுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top