Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் : ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை

திருவாரூரில் நடைபெற்ற ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது.

எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப் பைப் பெற்றுள்ள தலம் இதுவே.

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய கோயில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது.

ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேரோட்ட விழா பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

96 அடி உயர ஆழித்தேர்… அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ரா லிக் பிரேக்’  பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.

தேரின் கட்டுமானத்திற்கு பயன்டுத்தப்படும் மரங்கள், துணி, அலங்கார பொருட்கள்,குதிரைகள் என அனைத்தும் பிரமாண் டமான வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக் கப்படும். தேரோட்டத்தின் பொழுது தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். மேலும் வடக்கயிறின் எடையே 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் முன்பகுதியில் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய வேதங்களைக் குறிக்கும் 4 மரக்குதிரை கள், ரிஷபம் 8, யாளம் 2, பாம்பு யாளம் 1, பிர்மா 1, துவார பாலகர் 2, கமாய் கால் 2, மேல் கிராதி 4, கீழ் கிராதி 2, பெரிய கத்தி கேடயம் 2, பூக்குடம் 16, ராஜாராணி 2, கிழவன் கிழவி 2, சுருட்டி 4, இலை 8, பின்பக்கம் காமாய் கால் 6, அம்பராத் தோணி 2 என மொத்தம் 68 வகையான பொம்மைகள் பொருத்தப்பட்டு திருத்தேர் அலங்கரிக்கப்பட்டது. இந்தத் தேரில் அலங்கரிக்கப்பட்டுள்ள மலர் மற்றும் காகிதங்கள் மட்டுமே 50 டன் ஆகும்.

ஆரூரா… தியாகேசா’’ கோஷம்.. திருவாரூர் ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9ஆம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் இன்று காலையில் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் ‘‘ஆரூரா… தியாகேசா’’ என்ற பக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த விழாவில், மடாதிபதிகள் திருவாரூர் ஆதினம், தருமபுரம் ஆதினம், வேளக்குறிச்சி ஆதினம்,  நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ்,  திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட் சியர் சங்கீதா.

அனைத்துதுறை அரசு அலுவலர்களும், ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் திரளாக பங்கேற்றனர். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்த ஆழித்தேர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகள் என திருவாரூர் நகர வீதிகளில் அசைந் தாடி வந்த அழகு காண்போரின் மனதை  பக்திபரவசத்தில் ஆழ்த்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top