Close
செப்டம்பர் 19, 2024 8:52 காலை

புதுக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் சனிப்பிரதோஷ விழா

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் சனிக்கிழமை  நடைபெற்ற பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ விழாவின் சிறப்பு: சிவ வழிபாட்டில், முக்கியமானது பிரதோஷம். எந்த நாளில் பிரதோஷம் வந்தாலும், அப்போது சிவாலயம் செல்வது சிறப்பு. நந்திதேவருக்கு அபிஷேகம் செய்வதைத் தரிசிப்பது இன்னும் விசேஷம். அப்போது அந்த அபிஷேகத்துக்குப் பொருட்களும் வில்வமும் பூக்களும் வழங்குவது இன்னும் பலம் தரும்.

இந்தநாளில் மாலையில் சிவாலயம் சென்று பிரதோஷ பூஜையைத் தரிசித்தால் பிரச்னைகள் காணாமல் போகும். கவலைகள் மாயமாகும். பாவங்கள் விலகிவிடும். புண்ணியா பலன்களை கிடைக்கும்.

இல்லம் சிறக்கும், இல்லறம் செழிக்க, சந்ததி பலம் பெறும் என்பது ஐதீகம். பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ வழிபாடு.ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு..
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

மாலையில், நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற அமைப்பாளர் மல்லிகாவெங்கட்ராமன், திருக்கோவில் நிர்வாகிகள் அரிமளம் ரவி சிவாச்சாரியார், மகேஷ்குருக்கள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதைப் போல, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் ஆலயங்களிலும்,

பொன்னமராவதி சோழீஸ்வரர் ஆலயம், வேந்தன்பட்டி அருள்மிகு நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர்,

ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவில், மலைக்குடிப்பட்டி, ஈஸ்வரன்கோவில், கட்டகுடி, எண்ணை, புங்கினிப்பட்டி, இருந்திராப்பட்டி, இடையப்பட்டி, போலம்பட்டி, மாத்திராம்பட்டி, இலுப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top