மஹாளய அமாவாசை நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளக்கரையில் திரளானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு சனிக்கிழமை வழிபாடு நடத்தினர்.
ஒருவர் இறந்த பிறகு, அடுத்த வரும் அமாவாசையில் இருந்தே அவர்களை நினைத்து நாம் விரதம் இருந்து வழிபட துவங்கி விடலாம். மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக விளக்கேற்றி, அவர்களை நினைத்து தானம் கொடுப்பதன் மூலம் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு நற்கதி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அவர்களுக்கு பிறவா நிலை என்னும் சொர்க்க பதவியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வருடம் முழுவதும் முன்னோர்களை வழிபட முடியாதவர்கள், வழிபட தவறியவர்கள், முன்னோர்களை வழிபட மறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது முன்னோர்களை நினைத்து, வழிபட வேண்டும் என உருவாக்கப்பட்டதே மகாளய பட்சம் காலமாகும்.
![புதுக்கோட்டை](https://i0.wp.com/tamilmani.news/wp-content/uploads/2023/10/pdk14mah-amvs1.jpeg?resize=640%2C288&ssl=1)
பட்சம் என்றால் 15 நாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களும் முன்னோர்களை வழிபட ஏற்ற காலமாகும். இந்த 15 நாட்களும் முன்னோர்களை வழிபட தவறியவர்கள், 15 வது நாளில் வரும் மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்களை பொறுத்த வரை அம்மா, அப்பா இருவரும் இல்லாதவர்கள், இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இல்லை என்பவர்கள், குழந்தைகளை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள் கண்டிப்பாக அமாவாசை திதியில் விரதம் இருக்க வேண்டும். பெண்களை பொறுத்த வரை கணவர் உயிருடன் இருக்கும் வரை, இறந்து போன தனது பெற்றோர், உடன் பிறந்தோருக்காக ஒரு பெண் பட்டினியாக அமாவாசை விரதம் இருக்கவோ, எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது.
திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து, படையல் போட்டு வழிபடலாம்.