புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வெள்ளிக்கிழமை விரதத்தை தொடங்கினர்.
புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர். ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்களுக்கு காளீஸ்வரக்குருக்கள் மாலை அணிவித்தார்.
ஆலயத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா தீபாராதனை நடைபெற்று ஆலயத்தில் உள்ள விநாயகர் பெருமான் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேஸ்வரி, சனீஸ்வர பகவான் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தந்து விரத மாலை அணிவித்துக் கொண்டும் ஐயப்பனை வழிபட்டு சென்றனர் காளீஸ்வரர் குருக்கள் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்தனர்.

இதுபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், தண்டாயு தபாணி திருக்கோயில் ,சீதாபதி விநாயகர்கோயில், குமரமலைபால தண்டாயுதபாணி திருக்கோயில், வரசக்தி விநாயகர் கோயிலில் உள்ள பூங்காநகர் ஐயப்பன் சந்நிதியில் இன்று அதிகாலை வேளையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (நவ.17-ஆம்தேதி) தொடங்கியது.
இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ஆம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.
தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சந்நிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ஆம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர்.
பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். பின்பு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கபபட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று (நவ.17-ஆம் தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் கோவில் நடை நேற்று மாலை திறக்கப் பட்டதால் சபரிமலையில் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கிய தையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். மழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர்.
சந்நிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
பக்தர்கள் வரும் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27- ஆம் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ஆம் தேதி இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.
பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறுகிறது.
தொடர்ந்து ஜனவரி 19-ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ஆம் தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சுவாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சார்த்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும்.மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்நிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதி களில் 7,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
துளசி மாலை அணிந்து பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு விரதத்தை தொடங்கினர். இதேபோல், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, சேலம், திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று விரத மாலை அணிந்து கொண்டனர்.




