Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்வோமா..?

திருமணஞ்சேரி கோயில்

Thirumanancheri Kalyanasundareswarar Temple History in Tamil

திருமண தடைகளை நீக்க உதவும் முக்கியமான கோயில் திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் சிவன் கோயிலா ஆகும். அந்த கோயிலின் பூஜை விவரங்கள், திருமணஞ்சேரி கோயில் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருமணஞ்சேரி கோயில்

சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். பலர் சிறந்த துணைகளையும் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகளையும் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், இயற்கையான அல்லது வாழ்க்கைத் தடைகள் காரணமாக, சிலருக்கு ஆரம்பகாலத் திருமணத்தின் பாக்கியம் கிடைப்பதில்லை அல்லது வாழ்நாள் முழுவதும் தங்கள் துணையுடன் வாழமுடியாமல் போகலாம்.

இதைப்போன்ற தடைகளை போக்க, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திருமண பாக்கியம் பெற ஸ்ரீ திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வருகின்றனர்.
Thirumanancheri Kalyanasundareswarar Temple History in Tamil
பெரும்பாலான திருமணமான தம்பதிகள் இந்த கோயிலுக்குச் செல்வதன் மூலம் அவர்கள் அடைந்த வெற்றியைப் பற்றி சாட்சியமளிக்கவும் செய்கிறார்கள். திருமணம் தாமதமாகுதல், விவாகரத்து மற்றும் பிற திருமண சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து ஆசீர்வாதத்தைப் பெற்று சிறந்த வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

திருமணஞ்சேரி திருக்கோயில்:

திருமணஞ்சேரி கோயில் திருமண பூமி என்று குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு புனிதமான மற்றும் புகழ்பெற்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

திருமணம் தாமதமாகுதல் போன்ற பல்வேறு தடைகளை கடக்க திருமண ஆசீர்வாதம் கேட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். ஸ்ரீ திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் சிவபெருமான் மற்றும் அவரது மனைவி உமா (பார்வதி) வசிக்கும் இடமாகும்.

சிவபெருமானை கல்யாணசுந்தரேஸ்வரர் என்றும், அவரது மனைவி உமா பார்வதியை கோகிலாம்பாள் என்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர். திருமண ஆசீர்வாதம் பெறுவதற்கும் நல்ல குடும்பம் மற்றும் நல்ல துணை கிடைக்கவேண்டும் என்று பக்தர்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.

அவர்கள் தங்களுக்கு உரிய சரியான துணையை பெற்றவுடன் அவர்கள் கோயிலுக்குச் சென்று கோயில் குளத்தில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
Thirumanancheri Kalyanasundareswarar Temple History in Tamil
கோயில் வரலாறு

பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள். அப்படி பசுவான பார்வதிதேவி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக பார்வதிதேவியின் சகோதரர் விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவபெருமானை மணந்தார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார்.

நான்முகனான ஸ்ரீபிரம்மா, புரோகிதர் ஸ்தானத்தில் இருந்து சிவ பார்வதி திருமண வைபவத்தை நடத்தி வைத்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்தத் திருமணக் காட்சியை தூணில் சிற்ப வடிவமாகத் தரிசிக்கலாம்.

திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். உத்ஸவரின் திருநாமம் உத்வாக நாத ஸ்வாமி. அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயணர். ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக இருக்கும் உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள்

சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றார். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.
Thirumanancheri Kalyanasundareswarar Temple History in Tamil
கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முக்கியமான திருவிழா அவரது திருக்கல்யாணம்தான். அந்தத் திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாள் குடிகொண்டிருக்கும் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.

வழக்கத்திற்கு மாறாக, இந்த ஊரில் பெருமாள் மேற்கே பார்த்து இருக்கிறார். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. திருமணத்திற்காகக் கல்யாணசுந்தரரும் கோகிலாம்பாளும் கிழக்கு நோக்கி அமர, அதை நடத்தி வைத்த மைத்துனர் மகாவிஷ்ணு மேற்கே பார்த்து அமர்ந்தாராம். இங்கே அவர் லட்சுமியைப் பக்கத்திலோ அல்லது தன் திருமார்பிலோ தாங்கவில்லை. தாயாரை தன் மடியிலேயே தாங்கிய கோலத்துடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார்.

திருமணஞ்சேரி பரிகாரத் தலமாக விளங்குகிறது. லட்சுமி நாராயணர் கேட்டதைக் கொடுக்கும் வரதராஜனுமாவார். ஸ்ரீதேவி – பூதேவி சமேதரான இவரை வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

இங்கே பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி பகவானுக்கு ஹஸ்த நட்சத்திரம் மற்றும் புதன் கிழமைகளில் மூலிகைத் தைலாபிஷேகம் செய்வதும், நெய் தீபமேற்றி 11 முறை வலம் வருவதும் உடல் ஆரோக்யத்தை அளிக்கும். ராகு தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் ஐந்து தலை நாகருக்கு தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
Thirumanancheri Kalyanasundareswarar Temple History in Tamil
இப்படி சிவனும் விஷ்ணுவும் அருகருகே கோயில் கொண்ட திருமணஞ்சேரிக்கு வந்து தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் அமைந்து, இல்வாழ்க்கையில் சிறந்து வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் திருமணஞ்சேரி உள்ளது.

திருமணத்திற்குச் செய்ய வேண்டிய பரிகாரம்

திருமணமாக வேண்டி வருபவர்கள், இந்த கோயிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் குளித்து விட்டு பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரரைத் தரிசிக்க வேண்டும். பிறகு அர்ச்சனை செய்து அங்கு தீபம் ஏற்றுவதற்கான இடத்தில் 5 தீபம் ஏற்ற வேண்டும்.
Thirumanancheri Kalyanasundareswarar Temple History in Tamil
அங்கு திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்கவேண்டும். பிரசாதமாக வழங்கப்படும் மாலையைப் பத்திரப்படுத்தி வீட்டிற்குச் சென்றதும் அதனை ஒரு முறை போட்டுக்கொண்டு இறைவனை மனதார வணங்க வேண்டும். பிறகு கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தைத் தினமும் பயன்படுத்த வேண்டும்.

பின்னர் திருமணமான உடனே கணவன்-மனைவி இருவரும் மீண்டும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்தக் கோயில் திருமணத் தடையை நீக்க வல்லது. இந்த புனிதத் தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்.

திருமணஞ்சேரி கோயில் திறக்கும் நேரம்

காலை பூஜை காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும்
மாலை சடங்குகள் அதிகாலை 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
அஸ்தோத்தரம் மற்றும் சஹஸ்ர நாமார்ச்சனை காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top