காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
பழமையான இத்திருக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாகும். இங்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், இழந்த பதவி, நலமான வாழ்வு ஆகியன கிடைப்பதால் நாளுக்குநாள் பக்தர் வருகை அதிகரித்து வருகிறது.
பகீரதன் எனும் அரசன் வந்து சுக்கிர வாரத்தில் முருகப் பெருமானை வழிபட்டு இழந்த இராஜ்ஜியத்தை பெற்றான். அதனால் இங்கு வெள்ளிக் கிழமை 6 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு இழந்த செல்வங்கள், பதவிகள், சொந்த வீடு மனை ஆகியன கிடைக்கும்.
தேவகுருவின் வழிகாட்டுதல்படி இந்திரன் மங்கல வாரத்தில் இத்தலத்திற்கு வந்து முருகப் பெருமானைப் பூசித்து இந்திராணியை மணந்தான். இது கல்யாண பிரார்த்தனை தலமாகவும் உள்ளது. அதனால் 6 செவ்வாய்க் கிழமைகள் இத்திருக்கோயிலுக்கு வந்து மாலைகள் சாற்றி முருகப் பெருமானைப் வழிபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு 11.9.2008 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு வரும் ஜூலை 7 -ஆம் தேதி இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.மூலவர், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், உற்சவர், பைரவர், இடும்பன், கடம்பன் சந்நிதிகள் புதுப்பித்தல், பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைத்தல், விமானங்கள், கோபுரங்கள் வண்ணம் தீட்டுதல், தளவரிசை பழுதுபார்த்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், தேர் கொட்டகை அமைத்தல் ஆகிய திருப்பணிகள் சுமார் ரூபாய் 1.50 கோடி மதிப்பிட்டில் மேற்கொள்ளப்பட்டு தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இந்த திருக்கோயிலுக்கு 7.7.2025 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திருக்கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு விநாயகர் சந்நிதி முன்பு இரண்டு பந்தக்கால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு மங்கல வாத்தியங்கள் முழங்கிட பந்தகால்கள் திருக்கோயில் நிர்வாகிகளால் பிரகாரத்தில் வலமாக கொண்டுவரப்பட்டு திருக்கோயில் வெளிப்புறம் ஒன்றும் திருக்கோயில் பின்புறம் யாகசாலை அமைய உள்ள இடத்தில் ஒன்றுமாக இரண்டு இடங்களில் நடப்பட்டன.
அதன்பின்னர் அந்த பந்தக்கால்களுக்கு சந்தரசேகர சிவாச்சாரியார் தலைமையில் திருக்கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் நிர்வாக அலுவலர் சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை, துணைத்தலைவர் சிவா எத்திராஜ், தியாகு, வார்டு உறுப்பினர் முருகன், நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 6.6.2025 அன்று இத்திருக்கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பிறகு கும்பாபிஷேகம் முடியும்வரை மூலவர் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.