நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பாஜவினர், வேலுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு, இன்று 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர். இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில், பாஜவினர் சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோயிலில் வெற்றி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதனையடுத்து நாமக்கல் நாமகிரியம்மன் கோயில், நரசிம்மர் சாமி கோயில் ஆகிய கோயில்களில் வேலுக்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் ஆஞ்சநேயர் கோயிலில் வெற்றி வேலை சுமந்து கொண்டுவந்து, சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட பாஜ தலைவர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், நாமக்கல் நாமகிரி தாயார் , ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெற்றி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த வெற்றிவேல் முருகபக்தர்கள் மாநாட்டு திடலில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்படும், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து சுமார் 5000 பேர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளோம் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொது செயலாளர்கள் ராம்குமார், பிரபு மாவட்ட செயலாளர்கள் கணபதி, சரவணன்,ஜெயா, பூபதி , மாவட்ட துணைத் தலைவர் சேதுராமன், நாமக்கல் நகர தலைவர் தினேஷ், செயலாளர் வேல்ராஜ் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




