Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

புதுக்கோட்டை அருகேயுள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியமன் கோயில் பங்குனித்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். வற்றாத ஆகாய கங்கை, அருமை குளம், ஜம்புகேசுவரர் சுனை, பொழுதுபடா சுனை ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் அமைந்த பெருமை வாய்ந்தது. நாரதமுனி அம்பாளை வழிபட்ட மகிமையால் நாரதர் மலை என்ற இத்தலம் மருவி தற்போது நார்த்தாமலை என அழைக்கப்படுகிறது. இப்புண்ணிய தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு கடந்த மார்ச்.27 –ஆம் தேதி இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது, தொடர்ந்து  3.4.2022 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து 12.4.2022 –ஆம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. விழாவி்ன் முக்கிய நிகழ்வாக ஏப்.11 -ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.12) நாட்டு சலவைத் தொழிலாளர்களின் மண்டகப்படியைத் தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், காப்புக் களைதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

நார்த்தாமலை
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற சு. திருநாவுக்கரசர் எம்பி, ஆட்சியர் கவிதாராமு.

தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் தொடக்கி வைத்த‌னர்.

கோயில் செயல் அலுவலர் கோ.சரவணன்,   ஆலய மேற்பார்வையாளர்  ரெ. மாரிமுத்து, ஆய்வர் மா.யசோதா, புதுக்கோட்டை தேவஸ்தான அறங்காவல்குழு தலைவர் பா.செந்தில்குமார், அறங்காவலர்கள் சி.கவிதா, ஆர்.பி. ராமச்சந்திரன், ஏ.வி.ராஜேந்திரன், கு. கணேசன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, புதுக்கோட்டை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், விழாக் குழுவினர், மண்டகப் படிதாரர்கள் செய்திருந்தனர்.

இதில், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா மற்றும் ஓம் சக்தி பராசக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top