Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

வடசென்னையில் கடல் சீற்றம்: படகுகளை அப்புறப்படுத்திய மீனவர்கள்…

சென்னை

வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வெள்ளிக்கிழமை வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் வியாழக்கிழமை இரவு முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் கிழக்கு இலங்கை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்த நிலை கொண்டுள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தின் வடக்கு, மத்திய தமிழக பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

 இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல படிப்படியாக நகர்ந்து வரும் திங்கள்கிழமை அரபிக் கடலைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட்டனர்.

காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் கடுமையான கடல் சீற்றத்துடன்  காணப்பட்டது.  சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பி பார்ப்பவர்களை அச்சமூட்டச் செய்தது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராட்சத அலைகளால் இத்தடுப்புச் சுவர்களில் மேலும் பாதிப்பு ஏற்பட்டால் எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடலோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள்,  கட்டுமரக் கலன்கள் உள்ளன. புயலின் தாக்கத்தால் கடல் அலை தடுப்புச்சுவரையும் தாண்டி வீசியதால் அச்சமடைந்த மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன்கள் மூலம் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தினர்.

விசைப்படகுகளை இடைவெளியின்றி ஒன்றோடொன்று அணைத்து வைத்து கயிறுகளால் கட்டி வைத்தனர்.  எண்ணூர் தாழங்குப்பம் நெட்டுக்குப்பம்,சின்னக்குப்பம், ராமகிருஷ்ணா நகர், நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பைபர் மற்றும் மரக்கலன்களை கிரேன்கள் மூலம் அகற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.  கடல் கொந்தளிப்பு காரணமாக வடசென்னை பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top