Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறக் காரணம் என்ன.? எழுத்தாளர் நக்கீரன் விளக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசிய எழுத்தாளர் நக்கீரன்

வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறியதற்கான  காரணங்கள் குறித்து  சூழலியல்  எழுத்தாளர் நக்கீரன் வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கிப் பேசினார்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை பங்கேற்ற அவர்  “சுற்றுச்சூழலும் புதுக்கோட்டையும்” என்ற தலைப்பில்  மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டைக்கு முன்பொரு காலத்தில் ராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் என்ற பெயர் இருந்திருக்கிறது. பன்றிகள் இருந்த காடு என்றால், அந்தளவுக்கு வளமான ஊராக வளமுடன் இருந்திருக்க வேண்டும். அதன்பிறகு கோன் நாடு, கான் நாடு என்றெல்லாமும் புதுக்கோட்டைப் பகுதிகள் அழைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அளவுக்கு வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறக் காரணம் என்ன என்பதை யோசித்துப் பார்கக் வேண்டும்.

தமிழ் நிலப்பரப்பில் கண்டறியப்பட்ட கற்றளிகளில் அதிகமானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் ஏறக்குறை நான்கு கிலோ மீட்டருக்கு ஒரு கற்றளிக் கோவில்கள் உள்ளன. ஆனால் இந்தப் பகுதிகளில் சின்னப் பாறைகள்கூட கிடையாது.

அத்தனைக் கற்களையும் புதுக்கோட்டைப் பகுதிளில் இருந்துதான் கொண்டுசெல்;லப்பட்டுள்ளன. இங்குள்ள குன்றுகள் எல்லாம் இப்படித்தான் அழிக்கப்பட்டன. அநேகமாக முதல் குவாரி புதுக்கோட்டைப் பகுதியில்தான் இருந்திருக்கக் கூடும்.

குன்று என்பது நுண்காலநிலையைக் கொண்ட பகுதி என்று சூழலியலாளர்கள் அழைக்கிறோம். இந்தப் பாறைகள்தான் பருவமழையை தவறாமல் அழைத்து வந்திருக்கின்றன. அத்தனை வளம் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டம் குவாரிகளால் அழிந்தன.

ஒரு காலத்தில் மண் உப்பு அதிகமாக இருந்த பகுதி புதுக்கோட்டை. ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், கடல் உப்பைவிடவும் மென்மையாகவும் இருந்தது இந்த மண் உப்பு. கடல் உப்பை விட விலையும் குறைவாகக் கிடைத்தது. சமஸ்தானமாக காலத்தில் 175 கிராமங்களில் உப்பு எடுக்கும் தொழில் நடந்திருக்கிறது. இங்கிருந்து டெல்டா மாவட்டங்க ளுக்கு உப்பு குறைந்த விலையில் விற்கப்பட்டது. இதனால், கடலோரங்களில் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த உப்பளங்கள் போதிய லாபம் ஈட்ட முடியவில்லை.

ஆங்கிலேயர்களின் நிர்பந்தம் காரணமாக சமஸ்தான அரசு உப்புக்கு அதிக வரியை விதித்தது. இதன் காரணத்தால், இங்கிருந்து 88 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களில் 70 ஆயிரம் பேர் இலங்கைக்குச் சென்றுள்ளனர்.

85 ஆயிரம் என்பது சாதாரண எண்ணிக்கையல்ல. இது சாதாரண எண்ணிக்கை அல்ல. சமஸ்தானத்தின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர். இவர்களை நாங்கள் சூழலியல் அகதிகள் என்றழைக்கிறோம்.

அறந்தாங்கி அருகே இப்போதும் நரசிங்கக் காவிரி என்ற பெயரில் ஆறு இருக்கிறது. காவிரி என்ற பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடகில் உற்பத்தியாகும் காவிரியாறு பூமிக்கு அடியில் நகரும் தட்டுகளால் அதன் வழித்தடம் ஒவ்வொரு காலத்திலும் மாறி மாறி வந்துள்ளது.

ஒரு காலத்தில் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் வழிதான் கடலில் காவிரி கலந்திருக்கிறது. அதன்பிறகு பாலாற்றின் வழியே, கடலில் கலந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளாற்றில் வழியே மணமேல்குடியிலும், அதன்பிறகு அம்புலியாற்றின் வழியே சேதுபாவாசத்திரத்திலும், பின்னர் அக்னியாற்றின் வழியே அதிராம்பட்டினத்திலும் காவிரி கடலில் கலந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று வழித்தடங்களில் காவிரி பாய்ந்து இருக்கிறது. அப்படியென்றால், புதுக்கோட்டை மாவட்டம் எத்தனை வளமான நிலத்தடி நீரைக் கொண்ட பகுதியாக இருந்திருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

சூழலியல் அழிக்கப்பட்டதால் இன்று வறட்சியான மாவட்டமாக புதுக்கோட்டை இருக்கிறது. எனவே, புதுக்கோட்டையை வறட்சியான மாவட்டம் எனக் கூற வேண்டாம், புதுக்கோட்டை நிறைய தியாகங்களைச் செய்த மாவட்டம் என்பதுதான் சரியானது என்றார் எழுத்தாளர் நக்கீரன்.

விழாவிற்கு மருத்துவர் ச.இராமதாஸ் தலைமை வகித்தார். எழுத்தாளர் பவா செல்லத்துரை, மேனாள் துணை வேந்தர் சொ.சுப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக க.சதாசிவம் வரவேற்றார். கு.துரையரசன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top