Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம்: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி திட்டத்தை பார்வையிட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை வட்டாரம், திருக்கோகர்ணம் கல்யாணராம புரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா   (07.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்  ஆட்சியர்  கூறியதாவது:இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி சேவைகளை மேம்படுத் தவும், கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி விடுப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி சேவைகளை கண்டறிந்து விடுதலின்றி தடுப்பூசி சேவையினை வழங்கிட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, விடுபட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாம், முதல் சுற்று ஆகஸ்டு மாதம் 7 முதல் 12 வரையிலும், இரண்டாவது சுற்று செப்டம்பர் 11 முதல் 16 வரையிலும் மற்றும் மூன்றாம் சுற்று அக்டோபர் 9 முதல் 14 வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 0 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ள தடுப்பூசிகள் முழுமையாக இலக்கீட்டினை அடையப்பெற்றுள்ளதை கணக்கெடுப்பு செய்தும், கர்ப்பிணி களுக்கும் மற்றும் 0 முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கும் தடுப்பூசி சேவைகள் ஏதும் விடுபட்டுள்ளனவா என கணக்கெடுப்பு செய்து, மிஷன் இந்திர தனுஷ் 5.0 என்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும், சிறப்பு கவனம் தேவைப்படும் இடங்களை கண்டறிந்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 0 முதல் 5 வயதிற்கு உட்பட்ட 3,904 குழந்தைகளுக்கும், 494 கர்ப்பிணித் தாய்மார்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். 07.08.2023 முதல் 12.08.2023 வரை நடைபெறும் இம்முகாம் 1,240 மையங்களில் நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இதில் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், புதுக்கோட்டை ஆகியோர் உரிய பணிகளை ஒருங்கிணைப்பு செய்து தடுப்பூசி விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை கணக்கெடுப்பு செய்து கண்டறிந்து தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), வட்டாட்சியர் திருமதி.விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

——————————————————————————————————————–

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top