Close
ஜூலை 4, 2024 5:27 மணி

சென்னை, காமராஜர் துறைமுகங்கள் சார்பில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி

தமிழ்நாடு

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் தண்டையார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை திறந்து வைத்த சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் புதுவண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் திறந்து வைத்தார்.

சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் ஸ்வபோதினி தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் மன இறுக்கம் கொண்ட ( ஆட்டிசம்) குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி  அமைக்கப்பட்டுள்ளது.

 இப்பள்ளி அமைக்கப்படுவதற்கு காமராஜர் துறைமுகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் 10 ஆண்டுகளுக்கு இப்பள்ளியை நடத்துவதற்கான செலவுத் தொகை ஆண்டுக்கு தலா ரூ. 27 லட்சம் வழங்கிடவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிக்குத் தேவையான கட்டட வசதிகளை சென்னை துறைமுகம் இலவசமாக வழங்கியுள்ளது. இந்நிலையில் இச்சிறப்புப் பள்ளியை சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் வெள்ளிக்கிழமை  வைத்தார்.

அப்போது சுனில் பாலிவால் பேசியதாவது:

இச்சிறப்பு பள்ளியை நிர்வகிக்க உள்ள ஸ்வபோதினி தொண்டு நிறுவனம் சுமார் 34 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.  இங்கு  ஆட்டிசம், டௌன் சின்ட்ரோம், அறிவுக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனையுடன் உடற்பயிற்சி சிகிச்சை, தொழில் பயிற்சி, பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

இங்கு பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.    தற்போது இப்பள்ளியில் 20 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இங்கு சுமார் 200 பேர் வரை பயிற்சி அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  குறைபாடுடன் பிறக்கும் சிறப்பு குழந்தைகளை பராமரிப்பது என்பது சமுதாயக் கடமை ஆகும்.   இதனைக் கருத்தில் கொண்டே பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 கோடியில் சுகாதார மையம் புனரமைக்கும் பணி:

வடசென்னை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி தொடங்கப்பட்டுள்ள அதேவேளையில் இங்குள்ள ஆரம்ப சுகாதார மையம் ரூ.2 கோடியில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.  இவ்வளாகத்தில் உள்ள 1,200 வீடுகளில் சுமார் 800 வீடுகள் மீண்டும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  மீதமுள்ள 400 வீடுகள் சிதிலடைந்துள்ளதால் இடிக்கப்பட உள்ளது.

துறைமுக ஊழியர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் ஊழியர்களின் குழந்தைகள் அதிக அளவில் இல்லாத நிலையிலும் பொது மக்களின் வசதிக்காக இப்பள்ளியின் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இங்கு கடந்த ஆண்டு 470 மாணவர்கள் படித்து வந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 789 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டுகள், காலணி உள்ளிட்டவை துறைமுக நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வி கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்ப டுகிறது. வட சென்னை மக்களின் நலனை கருத்தில் கொண்டு துறைமுக நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்து வருகிறது என்றார் சுனில் பாலிவால்.

இந்நிகழ்ச்சியில் துறைமுக துணைத் தலைவர் எஸ் விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, செயலாளர் இந்திரனில் ஹஜ்ரா, துறை தலைவர்கள் கிருபானந்தசாமி, ஜெயசிம்மா, ஸ்வபோதினி தொண்டு நிறுவன அமைப்பாளர்  ராதாகணேசன், சிறப்பு பள்ளி முதல்வர் நந்தினி பிரியாகுமாரி, பிரீத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top