Close
ஜூலை 7, 2024 11:01 காலை

எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

சென்னை

எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எண்ணூர் முகத்துவாரப் பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எண்ணூர் முகத்துவாரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.

மிக்ஜாம் புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது சென்னை எண்ணெய் சுத்திக்கரிப்பு ஆலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு ஆயில் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தேங்கி கடலில் கலந்தது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சி புகைப்படங்களை பார்வை யிட்டார்.

அப்போது எண்ணெய்க் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது, இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் பாதிப்புகள் என்ன என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அமைச்சர் உதயநிதியிடம் விளக்கிக் கூறினார். பின்னர் அங்கு கூடியிருந்த மீனவர்களிடம் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது குறித்து குறைகளை உதயநிதி கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியது,

எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தென்மண்டல பசுமைப் தீர்ப்பாயத் தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில்  வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (டிச.17) எண்ணெய்க் கழிவுகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என கூறியிருக்கிறது.

இருப்பினும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும். இது குறித்து தீர்ப்பாயத்தில் எடுத்துரைக்கப்படும்.  எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அளிக்கும்  பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நிவாரணங்களை அளிப்பது குறித்து முதல்வர் பரிசீலனை செய்வார். எண்ணெய்க் கழிவுகள் கலக்கும் பிரச்னை தொடராமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்றார் உதயநிதி.

ஆய்வின்போது அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோ உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top