Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

மதுரை, விளாச்சேரியில் களிமண் விநாயகர் சிலை..! வண்ண.. வண்ண விநாயகர்..! (சிறப்பு செய்தி)

விநாயகர் சதுர்த்திக்கு விற்பனை செய்ய விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பெண்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விளாச்சேரி பகுதியில், சுமார் ரூ.40 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மதுரை விளாச்சேரி பகுதியில் பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர்.

இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் களிமண் பொருட்களில் விநாயகர் சிலை மற்றும் லட்சுமி, பார்வதி, சிவன், கொழு பொம்மைகள் உள்ளிட்ட சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.

பிற மாவட்டங்களுக்கும் விற்பனை

நான்கு அங்குல பிள்ளையார் முதல் 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வரை இப்பகுதியில் தயாராகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மதுரை மட்டுமல்ல விருதுநகர், தேனி, திண்டுக்கல் இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் கரூர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நீர் நிலைகளில் உள்ள களிமண்ணை சேகரித்து பதப்படுத்தி விநாயகர் பொம்மை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைக்கு களிமண் அச்சு தயார் செய்யப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டு சிறிய சிலைகள் ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, எட்டடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.

ரூ.30 முதல் ரூ.30 ஆயிரம் வரை

இதில் கஜ (யானை) முக விநாயகர், நந்தி விநாயகர் சிம்மவிநாயகர் மூஷிக விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை ரூபாய் 3 ஆயித்திற்கும், எட்டடி உயரம் உள்ள விநாயகர் 24 ஆயிரம் ரூபாய்க்கும், கஜமுகம் மற்றும் வாகனங்களில் உள்ள விநாயகர் செய்வதற்கு எட்டடி உயர விநாயகருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சூழல் ஆர்வம்

பல்வேறு பகுதிகளில் இருந்து விளாச்சேரி பகுதியில் வந்து விநாயகர் சிலைகள் செய்து வாங்கி செல்கின்றனர். மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக விநாயகர் சிலைக்குள் பனை விதைகள் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் , வீடுகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கும் போது அங்கு கரைகளில் பனை மரங்கள் வளர உதவியாக இருக்கும் என, சமூக அக்கறையோடும் சில விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.

சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, களிமண்ணால் செய்யப்படும் விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நீர்வளத்தை பாதுகாக்கவும் முடியும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் பிஓபி எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குளம், கண்மாய்களில் கரைக்கப்பட்டதால், நீராதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு நிலமும் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், நீர் மாசடைந்து நீரில் வாழும் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது.

சூழலுக்கு நண்பன்

இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பு ஏற்பட்டது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட்டிருப்பது அந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் ஆகும். களிமண் இயற்கையானது. நீராதாரங்களில் இருந்து பெறப்படும் இந்த களிமண் சூழலை பாதிக்காத சூழலின் நண்பன் ஆவான்.

களிமண் சிலைகளை தண்ணீரில் கரைத்தால் தண்ணீருக்கோ அல்லது நீர்வாழ் உயிரினங்களுக்கோ பாதிப்பு ஏற்படாது. அதனால், இதன் மூலமாக நீர் வளம், நீர்வாழ் உயிரினம் மற்றும் மண் வளம் ஆகியவற்றை பாதுகாக்க முடியும்.

தற்போது விளாச்சேரி பகுதியில் தயாராகி வரும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதனால் விற்பனையும் ஜரூராக நடந்து வருகிறது.

நீர்நிலைகளைக் காக்க களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி நீர்நிலைகளில் கரைப்போம்…! சுற்றுச்சூலை காப்போம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top