Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

மேற்குத்தொடர்ச்சி மலைகளை காப்பது நமது கடமை..!

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள மனதை கொள்ளைகொள்ளும் அருவிகள்.

இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை. பல்லுயிர் வாழும் அற்புத சோலைக்காடுகளைக் கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள “சைலண்ட் வேலி ” இடம் பெற்றுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான “நீலகிரி “யில், கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது. தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக் கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது.

“வரையாடு ” என்னும் அரிய உயிரினம் வாழும் ஆபூர்வ சூழல் அமைப்பை கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை. மேற்கு தொடர்ச்சிமலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன. இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.

மேற்கு தொடர்ச்சி மலை ஆபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக்கொண்டது. மேற்குதொடர்ச்சிமலையின் ஆனைகட்டி மலைப்பகுதியில் “சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம்” உள்ளது.

உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறைபூக்கும் “குறிஞ்சி மலர் ” நீலகிரி மலையில் பூக்கிறது. இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகளின்சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் “பொதிகையில் ” அமைந்துள்ளது.

திரிகூட ராசப்ப கவி வியந்துபாடிய “குற்றாலமும் “இங்குதான் உள்ளது. ஆன்மீக வழிபாட்டின் புனித தீர்த்தமான “பாண தீர்த்தம் ” இங்கு தான் உள்ளது. “ஜோக் பால்ஸ் ” என்னும் அழகிய அருவி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திளுக்கும் கவின்மிகு தலமாக உள்ளது. காவிரி அன்னையின் உற்பத்தி கேந்திரமான “குடகின் வனப்புமிகு தலைக்காவிரியும் உள்ளது. இன்னும் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்களைக்கொண்டமேற்குதொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது. ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை என்றால் மிகையாகாது.

ஆங்கிலன் அதை மட்டுமா செய்தான் பல்லுயிரிகள் வாழும் புகலிடத்தை மனிதர்கள் வாழ்வதற்காக அதன் எழிலை அழித்து ஊட்டி, வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கி, இயற்கைச்சூழலியல் சீர்கேட்டுக்கு முதன் முதலில் அச்சாரம் போட்டான்.!.

பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேபடுத்தினான். ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் இருப்பிடத்தை பின் வந்த நம் இனக்கயவர்கள் சூரையாடியதால், அவை மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன. விளைவு விவசாயிகளின் விளை நிலங்கள் அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப்பெரும் குந்தகம் ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக வனவிலங்குகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டது. வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதில், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பான பகுதிகளை தேயிலை, காப்பித்தோட்டங்கள் ஆக்ரமித்துள்ளன.

இவற்றுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சியினங்களில் ஆபூர்வங்களாக எண்ணப்படும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை அழித்து விட்டது பெரும் சோகம். சூழலியலில் தகவமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் காடுகள் சூரையாடப்பட்டு தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற மரங்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. இவ்வகை தாவரங்களின் வேர்ப்பகுதி வலுவற்றதால் பொழியும் மழையினை பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையை வெகுவாக இழந்து விட்டன.

ஆபூர்வ இனமான யானைகளின் சரணாலயமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வானளாவிய மரங்கள், சந்தனமரங்கள், தேக்கு மரங்கள், ஈட்டி மரங்கள், செம்மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெகுவாக காடுகள் விசமிகளால் அழிக்கப்பட்டு விட்டன. மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கையின் கொடை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

வருங்காலங்களில் இதை உயிர்ப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய வரைபடத்தில் “தென் இந்தியா ” பாலைவனமாகும் அபாயத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது. மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியலை பாதுகாக்கும் உறுதியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top