காஞ்சிபுரம் ஜெம் நகரில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்ற கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை சீர் செய்ய கோரியும் தனிப்பட்ட முறையில் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியான ஜெம்நகர் செயல்படும் அரசு மதுபான கடை இடமாற்றம் செய்யக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக மனு அளித்து வந்த நிலையில் , இன்று மீண்டும் அப்பகுதி பெண்கள் மாமன்ற உறுப்பினர் சித்தன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறிவரும் நிலையில் எங்கள் பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கிடையாது எனவும் வீட்டின் அருகே சிறுநீர் கழிப்பது அருவருத்தக்க வகையில் படுத்திருப்பது என அனைத்து வகையிலும் சீர்கேடு நிலவுகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அங்கங்கே வீசி செல்வதால் விலங்குகள் தொல்லையும் பெரிதாக உள்ளதாகவும் ஆதலால் அதனை உடனடியாக இடம் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.