மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது :
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசு அளித்துள்ள உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும்.
இதுபோன்ற முக்கியமான கனிமச்சுரங்க உரிமத்தினை மத்திய அரசு ஏலம் விடப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த தமிழக அரசின் கவலைகளை நீர்வளத் துறை அமைச்சர் ஏற்கனவே மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தனது கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
இதனிடையே, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு உரிமம் வழங்கியுள்ள அந்த குறிப்பிட்ட பகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம் ஆகும்.
இது குடைவரைக் கோவில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும்.
மக்கள் தொகை அதிகம் உள்ள இதைப்போன்ற கிராமங்களில், வணிக ரீதியாக சுரங்கம் தோண்டுவது நிச்சயமாக இந்த கிராமங்களில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும். அதனால் அவர்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
ஒரு மாநில அரசின் அனுமதியின்றி அந்த மாநிலத்தில் சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. அதனால் பிரதமர் அவர்கள் சுரங்க அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.