Close
ஜூன் 6, 2025 2:55 மணி

சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் : மதன் கார்க்கி திறப்பு..!

தமிழ் ஆய்வக திறப்புவிழாவில் கலந்துகொண்ட மதன் கார்க்கி

சோழவந்தான்:

மதுரை: கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி காலை 11:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. கல்வி வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அருவி நடனங்கள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தமிழ்மொழி ஆய்வகத்தை பிரபல இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் தமிழ் ஆர்வலரான பேராசிரியர் முனைவர் மதன் கார்க்கி துவக்கி வைத்தார்.

தமிழ் மொழியின் பண்பாடு, வரலாறு, இலக்கியம் மற்றும் காலத்தினூடான வளர்ச்சியை மாணவர்கள் ஆராயும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், தமிழ்மொழியின் சிறப்புகளை தொடர்ந்து கற்றுக் கொடுக்க ஓர் முக்கிய தளமாக இருக்கும்.

விழாவில் உரையாற்றிய பேராசிரியர் முனைவர் மதன் கார்க்கி, மாணவர்களிடையே தமிழ்மொழியின் புகழை எடுத்துரைத்து, “இளைய தலைமுறையின் தமிழ் தொடர்பு பந்தத்தை மேம்படுத்தும் இடமாக இந்த ஆய்வகம் அமையும்” எனக் குறிப்பிட்டார்.

Subemy Subtitling Services நிறுவனத்தாரும், பாட்காஸ்டருமான திருமதி. நந்தினி கார்க்கி விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். Silverzone நிறுவன தலைமை செயலாளர் பங்கஜ் காலோட் உரை வணிக துறையிலும் தமிழின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிக்கு கல்வி சர்வதேச பொதுப்பள்ளி நிறுவனத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் சுப்பிரமணியன், மனைவி திருமதி. கண்மணி செந்தில்குமார், மற்றும் கல்வி குழும பள்ளிகளின் தாளாளர் குமரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் அருணா நன்றி கூறினார். துணை முதல்வர் அபிராமி உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top