Close
பிப்ரவரி 22, 2025 3:32 மணி

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி.

நாமக்கல்:

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பால் வளத்துறை, ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை ஊக்கத் தொகையுடன், 4.3 கொழுப்பு சத்து உள்ள பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 38 எனவும், 8.8 கொழுப்பு சத்து உள்ள எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.47 எனவும் நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இது விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையாக இல்லை.

பால் உற்பத்தி செய்யும் கால் நடைகளுக்கான ஊட்டச்சத்து கொண்ட அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் பராமரிப்பு வேலைக்கான ஆட்கள் கூலி போன்ற செலவினங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது, இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 வரை தற்போது நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த நஷ்டம் வராமல் தடுப்பதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் பால் வளத்துறை உயர் அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வேளாண்மைத்துறை அறிவியல் நிலைய வல்லூர்கள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அடங்கிய உயர்மட்ட குழு அமைத்து, பால் உற்பத்தி செலவினங்களை ஆய்வு செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படியான கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top