திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை அருகே காசிரெட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் பியூட்டிஷியனாக தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பிள்ளையார் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா(25) என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் முடிந்து விருந்துக்காக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள மணமகளின் வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று காலை உதயகுமார் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு மாமியார் வீட்டிலிருந்து தனது அப்பாச்சி 160 இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
அவரது சகோதரர்கள் உறவினர்கள் நேற்று மதியம் ஒரு மணிக்கு மேல் மணமகனை தொடர்பு கொண்ட போது வந்துவிடுவதாக கூறியுள்ளார். மாலை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது செல்போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு 8 மணிக்கு உதயகுமார் அவரின் செல்போனில் இருந்து சித்தூர் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெறும் சாலையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களோடு உள்ளார் எனவும் அவர்கள் செல்போன் சார்ஜ் இல்லாமல் இருந்த நிலையில் தனது காரில் சார்ஜ் செய்து செல்போனில் உள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.
உடனே அவரது காரிலேயே ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் நீங்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என தகவல் அளித்துவிட்டு உதயகுமாரை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு உதயகுமார் உறவினர்கள் வந்துவிடவே அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
உதயகுமாரின் உடல் திருவள்ளூர் பிணவறையில் வைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுது புலம்பி தவித்த சம்பவம் அங்கு மருத்துவமனைக்கு வந்திருந்தவரை கண் கலங்க வைத்தது. மேலும் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக சென்ற மணமகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவர்.ஆறு வழிச்சாலையில் செல்ல காரணம் என்னவென்றும் அவர் விபத்தில் இறந்தாரா அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து விட்டு சென்றார்களா என்று தெரியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் பிச்சார்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்து நடைபெற்று உள்ளதால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணமான 6 நாட்களில் மணமகன் மர்மமான நிலையில் சாலையில் காயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.