காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இன்று தைத்திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோபூஜை நடைபெற்றதையடுத்து மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.

இந்த நிலையில் இத்திருக்கோயிலில் ஓவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அண்டை மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாளான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி சிறப்பு அலங்காரத்தில் உள்ள மூலவர் முருகப்பெருமானையும், பழங்களால் அமைக்கப்பட்ட பந்தலில் மலர்களால் அலங்கரித்த வள்ளி தெய்வானையுடன் தங்கமேனியில் உற்சவம் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானையும் உற்சவ முருகப்பெருமானையும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆலயம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.