நாமக்கல் :
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று அரசு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தூய்மைப் பணிகள், சுகாதார பணிகள், பாதுகாப்பு பணிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரம், உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாள் விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். சுற்றுப்புறத்தை பாதுகாக்கம் வகையில் துணிப்பைகளை பயன்படுத்துமாறு கடை உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரிய மணலியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு சமுதாய கூடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.