நாமக்கல்:
வையப்பமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய பஞ்சாயத்து யூனியன் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வார்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின், மாவட்ட மாநாடு, நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் பிரபுசங்கர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலவிநாயகம், பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் திருவரங்கன், மாநில செயலாளர் வீரகடம்பகோபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், ஒன்றியத்தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் ஜீப் டிரைவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டங்களுக்கு, தனி ஊழியர் கட்டமைப்பை வழங்க வேண்டும்.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், சத்துணவு திட்டத்தில், 60 சதவீதம் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு, டைப்பிஸ்ட் நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பஞ்சாயத்து செயலாளர்களுக்கு கருவூலகம் மூலம் சம்பளம் வழங்கி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை வழங்க வேண்டும். எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியங்களைப் பிரித்து, வையப்பமலை ஒன்றியத்தை புதியதாக உருவாக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திரளான ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.