நாமக்கல் :
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பணியாளர்களுக்கு ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் 16 குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
நாமக்கல் போதுப்பட்டி ரோட்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பணியாளர்களுக்கு ரூ. 7.19 கோடி மதிப்பில் 16 குடியிருப்புகள் கட்டுவதற்கு, அறநிலையத்துறை அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, நாமக்கல்லில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறிநிலையத்துறை உதவி கமிஷனர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மத்தியக் கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., பூமி பூஜையில் கலந்துகொண்டு கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகர துணை மேயர் பூபதி, கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், ஆடிட்டர் வேங்கடசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.