திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில்,மகாலட்சுமி நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மற்றும் பெரியாயி அம்மன் திருக்கோயில் உள்ளது.
இக்கோவிலில் 11-ம் ஆண்டு தீமிதிவிழா மற்றும் மாசி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி கோவிலுக்கு வந்தனர். பின்னர்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
மாலை காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி மங்கள வாத்தியம் முழங்க, வானவேடிக்கையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும், மதியம் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.இரவு அக்கினி கப்பரை கரத்தில் ஏந்திய வண்ணம் அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தூப- தீப ஆராதனை,மதியம் கோயில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
மாலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வேப்பம்பேடு கிராமம் செல்லியம்மன் ஆலயத்தில் புனித நீராடினர்.பின்னர்,வான வேடிக்கையுடன் மேளத்தாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.இரவு 7 மணிக்கு கோயில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி 200 பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இரவு கோவில் வளாகத்தில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாளை காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் விடாத்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சிக்கு,ஆலய நிர்வாகி அம்மன் அருளாளர் ஜி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர்கள்,கிராம பொதுமக்கள்,பெரியோர்கள், வியாபார நண்பர்கள்,ஆலய நிர்வாக குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.