Close
மார்ச் 2, 2025 12:14 காலை

குறைந்த விலை; தரமான விதை :அப்புறம் என்ன வாங்குங்க விவசாயிகளே..! அள்ளுங்க லாபத்தை..!

தரமான விதைகள் வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறைவான விலையில் நிறைவான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய விதை கிராமத் திட்டத்தில் பங்கு பெறுவீர். பயனடைய மாநில திட்ட வேளாண் துணை இயக்குனர் சாருமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுக்கூர் வட்டாரம் அண்டமி மற்றும் நெம்மேலி கிராமங்களில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2017-18 மற்றும் 2018 19 ஆம் ஆண்டின் கீழ் அமைக்கப்பட்ட விதை கிராமத் திட்ட குழு உறுப்பினர்களுக்கான புத்தூட்ட பயிற்சி அண்டமியில் உத்திராபதி கோவிலில் குழு தலைவர் குப்புசாமி ஒருங்கிணைப்புடன்
நெம்மேலி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் விதை கிராம குழு தலைவர் பெரமையன் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.

இப் பயிற்சியில் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் சாருமதி அவர்கள் கலந்து கொண்டு விவசாயத்தின் அடிப்படையான தரமானவிதை ரகங்களை குறைந்த விலையில் நிறைவான அளவில் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் விதை கிராம குழு உறுப்பினர்களின் பங்கு அதிகமாகும். விதை கிராமகுழு உறுப்பினர்களுக்கு உரிய தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதன் மூலம் தரமான விதை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

மேலும் நெல் உளுந்து கடலை எள் போன்ற விதைகளை தங்கள் தேவைக்கும் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் அடுத்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலத்தில் உரிய விலைகளில் பரிமாறிக் கொள்கின்றனர். இதன் மூலம் கிராம அளவில் விதை தேவையில் சுயசார்பு மற்றும் தன்னிறைவு அடைய முடியும். சந்தை விலையை விட குறைவான விலையில் விதைகள் கிடைக்கும். விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் சமமாக பயனடைகின்றனர்.

விதை கிராம உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து விதை உற்பத்தி செய்யும் பொழுது தடுப்பு இடைவெளி குறையலாம். பண்ணை எந்திரங்கள் பயன்படுத்துவதும் அறுவடைக்குப் பின் விதைகளை கையாளுவதும் சுலபமாகும். ஒரே ரகத்தை பயிரிட்டு உற்பத்தி செய்வதால் பலரக விதைக்கலப்பு தவிர்க்கப்படுகிறது. விதைச்சான்று துறையின் மூலம் விதைப்பண்ணையை கண்காணிப்பதும் எளிது. ஒருங்கிணைந்து இடுபொருள் வாங்குவதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி செலவினமும் குறைகிறது.

எனவே விதை பண்ணை அமைக்கும் விவசாய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தரமான விதைகளை உற்பத்தி செய்து அரசுக்கும் கொடுக்கலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். அல்லது மண்ணச்சநல்லூர் சம்பா போல நெம்மேலி சம்பா என்ற தனிப் பெயருடன் விதை விற்பனையிலும் ஈடுபடலாம் என விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பட்டுக்கோட்டை விதைச்சான்று அலுவலர் சங்கீதா விதை பண்ணை உற்பத்தியில் ஈடுபடும்போது விதைப்புக்கு முன் தடுப்பு இடைவெளி விதைப்பு முறைகள் விதை நேர்த்தி போன்றவை பற்றி எடுத்துக் கூறினார்.

எந்த ஒரு ரகத்தையும் அதன் பூக்கும் பருவத்தில் மிக எளிதாக பிறரக கலப்பை கண்டறிந்து நீக்க முடியும்.. கலவன்களை நீக்கிய பின் உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு தரமான விதை கிடைப்பதை விதை உற்பத்தியாளர் உறுதி செய்திட வேண்டும் . அறுவடைக்குப் பிறகு விதைகளை சுத்தம் செய்தல் சரியான ஈரப்பதத்தில் பராமரித்து தரம் பிரித்து விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி உரிய தர பரிசோதனைகளை மேற்கொண்டு முளைப்புத்திறனை உறுதி செய்திட வேண்டும் போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

வேளாண்மை அலுவலர் சரவணன் விவசாயிகள் பதிவு குறித்து எடுத்துக் கூறி பதிவு செய்யாத விவசாயிகள் உடன் பதிவு செய்திட கேட்டுக்கொண்டார். மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, இயற்கை இடுபொருள் பயன்படுத்தி விவசாயம் செய்வது பற்றி எடுத்துக் கூறினார். ஆத்மா திட்ட அலுவலர் சுகிர்தா பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளை பதிவு செய்தார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் மற்றும் கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top