நாமக்கல் :
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறøதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 388 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பி.எஸ்சி (கணிதம்) படித்து வரும் மாணவி கீதாவிற்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் இலவச லேப்டாப் கம்ப்யூட்டரை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 பேருக்கு ரூ. 35,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநகராட்சி மேயர் திரு.து.கலாநிதி, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.