சோழவந்தான்:
நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பிரிவு முன்பாக வந்த போது திடீரென்று டயரில் தீப்பிடித்தது.
அதை பார்த்த டிரைவர் மகேஸ்வரன் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார் . ஆனால் அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் தீமளமள என்று லாரி முழுவதும் எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அந்தப் பகுதியில் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு)ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.