உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இல்ல விழாக்களின் போது, பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள் மற்றும் பிரச்சினைகள் உருவாகி வருவதை தவிர்க்கும் பொருட்டும், திருவிழா காலங்களில் மது மற்றும் போதை பொருட்களை அனுபவித்து விட்டு அட்டகாசத்தில் ஈடுபடுவர்களை கண்டிக்கும் வகையில், கிராமத்தில் பட்டாசு வெடிக்கவும், மது மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவிலில் கூடிய கிராம கமிட்டி நிர்வாகிகள் கிராம மக்களின் ஆலோசனைபடி, பட்டாசு வெடிக்க தடை, போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிப்பதாக தெரிவித்தனர்.
மீறும் பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மேலும் ,கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகளை உள்ளூரில் அமைந்துள்ள அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் எனவும், குற்ற செயல்களை தடுக்க கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிராம கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர்.
இயற்கையை மாசுபடுத்தும் வகையில் வெடிக்கப்படும் பட்டாசு வெடிக்க தடை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதை பொருட்களுக்கு தடை விதிப்பதோடு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் கொண்டு வந்த கிராம மக்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.