சோழவந்தான்:
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களுக்கான அங்கன்வாடி மையம் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது அங்கன்வாடி திறக்கப்பட்ட போது அங்கன்வாடி பின்புறம் கட்டப்பட்ட குழந்தைகளுக்கான கழிப்பறையில் செப்டிக் டேங்க் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 அடி ஆழ பள்ளம் தோண்டிய நிலையில் செப்டிக் டேங்க் பணியை முடிக்காமல் காண்ட்ராக்ட் பணி செய்தவர்கள் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.
மேலும் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடமும் தொட்டால் உதிரக்கூடிய நிலையில் கட்டடங்கள் தரமற்ற முறையில் கட்டிவிட்டு சென்று விட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் படிக்கக்கூடிய அங்கன்வாடி மையம் எந்நேரமும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் பின்னால் கழிப்பறைக்காக கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பள்ளத்தையும் மூடாமல் சென்று விட்டதால் குழந்தைகள் அவசர தேவைக்காக அங்கன்வாடி பின்புறம் செல்லும்போது பத்தடி பள்ளத்தில் விழுந்துவிடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்த பகுதி பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு தொடர் புகார்களை அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்.
மேலும் அங்கன்வாடி மையம் பின்புறம் உள்ள கழிப்பறையை சரி செய்ய வேண்டும். உடனடியாக செப்டிக் டேங்க்-ஐ மூடி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்