அலங்காநல்லூர் :
திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார்.
சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், திருவிழா முடிந்து இன்று காலை மீண்டும் அழகர்கோவில் வந்தடைந்தார். சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 10ஆம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்ற நிலையில், மே 12ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மே 13ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
மே 14ல் மோகன அவதாரத்தில் பக்தி உலாவுதல், கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. மே 15ல் பூப்பல்லத்தில் எழுந்தருளல், இதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த நிகழ்வில்,ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கடச்சனேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக வந்த கள்ளழகர் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தனது இருப்பிடமான அழகர்கோவில் வந்தடைந்தார்.
கள்ளர் திருக்கோலத்தில் அழகர்கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு வண்ணமலர்கள் தூவி வரவேற்பு அளிக்கபப்ட்ட தோடு, கற்பூரம் ஏற்றி சுவாமியை மூன்று முறை சுற்றி 21 திருஷ்ட்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து
கொண்டதோடு, வாசல் வரை வந்து நின்று கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர்.