சிவகங்கை.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டமானது தொடங்கி வைக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், குறிப்பிட்ட கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்ட முகாமானது நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், ”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்படி, வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், விதைச்சான்றளிப்புத் துறை வட்டார அலுவலர்கள் மற்றும் சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை,
பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் திட்டங்களையும் எடுத்துக் கூறி அவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டம் முகாமானது செயல்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 521 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படவுள்ளது.
அதில், சிவகங்கை வட்டாரத்தில் இடையமேலுார் மற்றும் நாமனுார் ஆகிய கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டாரத்தில் வாகைக்குளம் மற்றும் குருந்தனிவாரியேந்தல் ஆகிய கிராமங்களிலும், மானாமதுரை வட்டாரத்தில் கீழப்பசலை மற்றும் கால்பிரவு ஆகிய கிராமங்களிலும், இளையான்குடி வட்டாரத்தில் மேலாயூர் மற்றும் கோட்டையூர் ஆகிய கிராமங்களிலும், திருப்புவனம் வட்டாரத்தில் பாப்பாக்குடி மற்றும் மேலச்சொரிக்குளம் ஆகிய கிராமங்களிலும், சாக்கோட்டை வட்டாரத்தில் மித்ராவயல் மற்றும் நேமம் ஆகிய கிராமங்களிலும், தேவகோட்டை வட்டாரத்தில் பொன்னலிக்கோட்டை
மற்றும் மாவிடுதிக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், கண்ணங்குடி வட்டாரத்தில் சித்தனுார் மற்றும் தேரளப்பூர் ஆகிய கிராமங்களிலும், கல்லல் வட்டாரத்தில் தட்டட்டி மற்றும் வெளியாத்துார் ஆகிய கிராமங்களிலும், திருப்பத்துார் வட்டாரத்தில் ஒழுகமங்கலம் மற்றும் வடக்கு இளையாத்தங்குடி ஆகிய கிராமங்களிலும், சிங்கம்புணரி வட்டாரத்தில் மேலப்பட்டி மற்றும் எஸ்.வி.மங்கலம் ஆகிய கிராமங்களிலும், எஸ்.புதுார் வட்டாரத்தில் மாந்தகுடிப்பட்டி
மற்றும் முசுண்டப்பட்டி ஆகிய கிராமங்களிலும் உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டம் முகாமானது நடைபெறவுள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களது பகுதிகளில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகள் மற்றும் சார்புத்துறைகளின் சார்பில் நடத்தப்படும் முகாம்களில் கலந்து கொண்டு, அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.




