நாமக்கல்:
மாம்பழ விலை கடும் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, மா விவசாயிகளைப் பாதுகாக்க மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளை திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். 2024ல், பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், நடப்பு ஆண்டு, மாமரத்தில் மாங்காய் நல்ல விளைச்சல் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள், ஆண்டு தோறும் மே முதல் வாரத்தில் இருந்து, மாங்காய்களை கொள்முதல் செய்து மாங்கூழ் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு மாங்காய் நல்ல விளைச்சல் இருந்தும் மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் இதுவரை இயங்கவில்லை. அதனால், நல்ல விளைச்சல் உள்ள செந்தூரா, பங்கனபள்ளி உள்ளிட்ட மாம்பழ வகைகள் கடுமையாக விலை சரிவடைந்து, ஒரு டன் ரூ. 5,000 விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுப்படியான விலை இல்லாததால், மரத்தில் இருந்து மாங்காய்களை அறுவடை செய்யாமல் மாம்பழங்கள் மரத்தில் இருந்து பழுத்து கீழே கொட்டுகிறது. 2024ல், மாம்பழம் ஒரு டன் ரூ. 22,000க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மாங்கூல் தயாரிக்கும் தனியார் ஆலைகள் செயல்படாததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கிறது. மா சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர், மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவாயிகளுடன் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாங்கூழ் ஆலைகள் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது