நாமக்கல் :
பள்ளி துவங்கிய முதல் நாளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, கல்வி உபகரணங்களை ராஜேஷ்குமார் எம்.பி., வழங்கினார்.
தமிழகமெங்கும் கோடை விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிகள் துவங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கல்வி உலகரணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி உலகரணங்கள் வழங்கும் விழாவிற்கு, எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் 726 மாணவ, மாணவிகளுக்கு புத்கப்பை, சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரசு பள்ளியில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்ற நோக்கில் ஏழை, எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையிலும், பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் 13 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலமாக முற்றிலும் இலவசமாக மருத்துவ கல்வி உள்ளிட்ட அனைத்து தொழிற் கல்விகளையும் பயில்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மாணவ மாணவிகள் இதைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, டிஇஓ விஜயன், மாவட்ட சமூகநல அலுவலர் காயத்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.