நாமக்கல் :
நாமக்கல்லில் நாளை நடைபெற உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்.பி., கலந்துகொள்கிறார்.
இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின், 102-வது பிறந்த நாள் விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நாளை காலை 8 மணிக்கு, நாமக்கல் பரமத்தி ரோட்டில் செலம்பகவுண்டர் பூங்காவில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமையில் நடைபெற உள்ளது.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விழாவில் கலந்துகொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளார். பின்னர். மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 திமுக மூத்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரம், டவுன் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அனைத்து திமுக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.