Close
ஜூன் 6, 2025 11:04 மணி

ஒரு மாத சம்பளம் கொடுக்கலீன்னா அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் கேள்வி?

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸ் அதிகாரி

ஒரு மாத சம்பளம் வழங்காமல் விட்டால் அதிகாரிகள் வேலை செய்வார்களா ? விவசாயிகள் பணம் வழங்க தாமதம் ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை முன் நிறுத்தி காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்ட விவசாயிகள்.

விவசாய மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய இரு துறைகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்தது.

இதில் தமிழ்நாடு மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் , தேசிய கூட்டமைப்பு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு கடந்த 90 நாட்களுக்கு மேலாகி பணம் விவசாயிகளுக்கு வழங்கபடவில்லை.

இது குறித்து விவசாயி சங்க கூட்டம் , வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என பல வகைகளில் விவசாயிகள் மனுக்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில் தற்போது வரை வழங்கவில்லை என்பதால் பள்ளி கல்லூரி கட்டணங்கள் , குடும்ப விசேஷங்களுக்கு பணம் இல்லாதது மற்றும் அடுத்த பருவத்திற்கான பயிர் செய்வது என அனைத்தும் பிரச்சனைகளாக விவசாயிகளுக்கு முன்னெடுத்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த விவசாயிகள் அடுத்த வாரத்திற்குள் சரி செய்து விடுவார்கள் என தெரிவித்ததால், அதில் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நேரடியாக நுகர்வோர் வாணிப மண்டல அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் ஆய்வாளர் சக்திவேல் , விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சமாதானம் அடையாத நிலையில் கொள்முதல் அலுவலர் நேரடியாக சென்னை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவசாயிகளை பேச வைத்த நிலையில் வரும் மூன்று நாட்களுக்குள் பணம் விவசாயிகளுக்கு தரப்படும் என தெரிவித்ததால் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டனர்.

காவல்துறை மற்றும் கொள்முதல் அலுவலரிடம் விவசாயிகள் ஆவேசமாக ஒரு மாத சம்பளம் அரசு அதிகாரிகளுக்கு தரவில்லை என்றால் வேலை செய்வீர்களா ? விவசாயிகள் பணத்தை வாங்கித் தர மட்டும் காலதாமதமே ஏன் ? பணம் உரிய காலத்தில் தரப்படாவிட்டால் வரும் திங்கள்கிழமை மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் முன் வருவார்கள் என எச்சரிக்கையும் செய்தனர்.

இதனால் 25 நிமிடம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top