உசிலம்பட்டி.
உசிலம்பட்டி அருகே மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டெம்போ வேன் நடு ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஸ்ரீ ரங்காபுரம் விலக்கு பகுதியில் தேனியிலிருந்து மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டெம்போ வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், வாகனம் முழுவதும் பற்றி எரிந்து தீ பிளம்பாக காட்சியளித்தது.
இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்து ,விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அதற்குள் வாகனம் 80 சதவீதம் எரிந்து சேதமடைந்தது. மேலும் வாகனத்தில் இருந்த மருத்துவ மூலப்பொருட்களும் எரிந்து தீக்கிரையானது.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் வாகனத்தை இயக்கி வந்த சகுபர் சாதிக் என்பவரிடம் நடத்திய விசாரணையில், தேனி அல்லி நகரம் பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனத்திலிருந்து மருத்துவ மூலப்பொருட்களை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், மூலப்பொருட்களின் மதிப்பீடு, வாகனத்தின் மதிப்பீடுகளை ஆய்வு செய்து இந்த தீவிபத்தில் எவ்வளவு லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.