நாமக்கல் :
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, வேதாத்திரி மகரிஷி நகரில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
போலீஸ் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு, விழாவை துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான, உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவை அனைவரும் கைவிட வேண்டும். விழாவையொட்டி, மரக்கன்றுகளை நடுதல், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, என்று கூறினார்.
வேதாத்திரி மகரிஷி நகரில் வனத்துறை சார்பில் ஆயன், நீர் மருது, இலுப்பை, புங்கன் உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் நடும் பணியினை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். விழாவில், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், வனச்சரக அலுவலர்கள் பழனிசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.