நாமக்கல்:
நாமக்கல் நகரில், ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பேங்க் மேனேஜர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் திருச்சி ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட ஜெயநகரைச் சேர்ந்தவர் சவரணன் (45), இவர் யூனியன் பேங்க் பெங்களூர் கிளையில் மேனேஜராக பணியாற்றி வந்தார். திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தார்.
அங்கிருந்து பஸ் மூலம் நாமக்கல் வந்த அவர், நாமக்கல் – திருச்சி மெயின் ரோட்டில் பஸ்சில் இருந்து இறங்கி, வீட்டிற்கு நடந்துசென்றுகொண்டிருந்தார். அவருடைய வீட்டிற்கு அருகில் ரயில் பாதை உள்ளது. அவர் குறுக்கு வழியில் செல்வதற்காக ரயில் பாதையில் தண்டவாளத்தைக் கடந்துசென்றார். அப்போது அவ்வழியாக வந்த கரூரில் இருந்து சேலம் சென்ற ரயில் சரவணன் மீது மோதியது. இதனால் ஏற்பட்ட விபத்தில், தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி உயிரிழந்த சரவணன், நாமக்கல் மாநகர மேயர் கலாநிதியின், சகோதரியின் கணவர் என்பது தெரியவந்துள்ளது. சரவணனுக்கு நந்தினி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.