Close
ஜூன் 7, 2025 1:36 காலை

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை..!

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

நாமக்கல் :

பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த 3ம் தேதி இரவு ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்பேட்டியில், பெங்களூர் ஆர்சிபி அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, பள்ளிபாளையம் நான்கு ரோடு மற்றும் பள்ளிபாளையம் புது மேம்பாலம் ஆகிய இடங்களில் சில இளைஞர்கள் 3 டூ வீலர்களில் சாகசம் செய்தும், அரசு பஸ்சை வழிமறித்து, பஸ் முன்பு ஆடிப்பாடி பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர்.

இது சம்மந்தமான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பள்ளிபாளையம் அருகில் உள்ள, ஆவாரங்காடு, அக்னி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வீரமணி, சவுரவ், யுவராஜ், தியாகு, சச்சின் மற்றும் 2 பேர் சேர்ந்து இச்செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக மேற்படி 6 இளைஞர்கள் மீது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், அந்த இளைஞர்கள் தங்களது தவறை உணர்ந்து இது போன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும், தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தும் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் யாரும் பொது இடங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top