உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே, கோவிலில் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய அரசு, மீண்டும் உரியவர்களுக்கே வழங்க வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காவல் பணியில் இருந்தவர்களுக்கு கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு கீதாரி, பட்டமும், தானமாக நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை கடந்த 1985 ஆம் ஆண்டு நில கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கிய நிலத்தை கையகப்படுத்திய அரசு, அந்த இடத்தை ஆதிதிராவிட நலத்துறைக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிட மக்களுக்கும் பட்டா வழங்காமல், தனி நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கி வருவதாகவும், கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் காவல் பணி செய்த மூன்னோர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பிறமலை கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் 200 க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து பயனடைய கூடிய பயனாளிகளுக்கு நிலங்களை வழங்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.